search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சார பஸ்கள்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மீதமுள்ள பேருந்துகளும், இந்த ஆண்டு இறுதிக்குள் புதுப்பிக்கப்பட்டு தடத்தில் இயக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • பேருந்துகளின் பராமரிப்பதில் தனி கவனம் செலுத்தியதின் காரணமாக 2022-23 மற்றும் 2023-24 ஆண்டுகளில் முறையே 0.002 மற்றும் 0.001 ஆக குறைந்துள்ளது.

    சென்னை:

    அரசு போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு, சாலை மார்க்கமான பொதுப் போக்குவரத்தை, எட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் 20,260 பேருந்துகள் மூலம் 10,125 வழித்தடங்களில் இயக்கி வருகிறது. தினசரி 18,728 பேருந்துகளும், வார இறுதி நாட்களில் பொது மக்களின் தேவையின் அடிப்படையில் அதிகப்படியான சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு, நாளொன்றுக்கு 1.76 கோடி பயணிகள் பயன்பெறுகின்றனர்.

    இதில் விடியல் பயணம் திட்டத்தின் மூலம் மகளிர் நலனுக்காக பயணக் கட்டணமில்லாமல் இயக்கப்படும் 7,179 பேருந்துகளின் மூலம் 51.47 லட்சம் மகளிர் தினசரி பயணிக்கின்றனர்.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் தடத்தில் பழுதடைதல் எண்ணிக்கை கடந்த காலங்களில் அதிகபட்சமாக 10,000 கிலோமீட்டருக்கு 0.10 என்ற அளவில் இருந்த எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் பேருந்துகளின் பராமரிப்பதில் தனி கவனம் செலுத்தியதின் காரணமாக 2022-23 மற்றும் 2023-24 ஆண்டுகளில் முறையே 0.002 மற்றும் 0.001 ஆக குறைந்துள்ளது.

    ஊடகங்கள் மூலம் அரசின் கவனத்திற்கு வரும் பழுதுகள் உட்பட, அனைத்து பழுதுகளும் முழுமையாக களையப்படவேண்டும் என்ற நோக்கத்தில், தமிழ்நாடு அரசு 48 மணி நேரத்திற்குள் அனைத்து பேருந்துகளையும் ஆய்வுக்கு உட்படுத்தி சரி செய்யவேண்டும் என 26.4.2024 தேதியில் உத்தரவிடப்பட்டதனை தொடர்ந்து தற்போது அனைத்து பஸ்களையும் ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் பழுதுகள் சரி செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில் 1000 மின்சார பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக 500 மின்சார பஸ்கள் விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள பஸ்களின் கூண்டினை புதுப்பிக்க 2022-23 ல் 1000 பஸ்களும் 2023-24 ல் 500 பஸ்களும் என நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதுவரையில் 839 பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு தடத்தில் இயக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பேருந்துகளும், இந்த ஆண்டு இறுதிக்குள் புதுப்பிக்கப்பட்டு தடத்தில் இயக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும், அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பயிற்சி அளிப்பதில் தனிக்கவனம் செலுத்தியதன் காரணமாக 2022-23-ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2023-24 ல் 29 உயிரிழப்புகள் குறைந்து உள்ளது.

    பொது மக்களுக்கு தட பழுதுகள் மற்றும் விபத்து இல்லாத பேருந்து இயக்கத்தை இலக்காக கொண்டு, அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத்துறை செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பஸ் படிக்கட்டின் உயரத்தை தரையில் இருந்து 400 மில்லி மீட்டர் உயரத்துக்கும் குறைவாக வைத்திருக்குமாறு டெண்டர் எடுப்பவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
    • இதனால் பயணிகள் எளிதாக பஸ்களில் ஏறவோ, இறங்கவோ முடியும். மேலும் சக்கர நாற்காலியை ஏற்றிச்செல்லும் வகையில் சாய்வு தளம் அமைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகரில் புதிதாக 100 மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மூலம் இயக்குவதற்காக இந்த 100 மின்சார பஸ்களை வாங்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

    ஜெர்மனி வங்கியின் நிதி உதவியுடன் இந்த பஸ்கள் வாங்கப்படுகின்றன. இதற்காக டெண்டரும் விடப்பட்டுள்ளது.

    இந்த பஸ்கள் குளிர்சாதன வசதி கொண்டவையாக இருக்கும். இதில் 36 பேர் அமரும் வசதி கொண்டது. சக்கர நாற்காலியில் சென்று அமரக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு இருக்கையும் இதில் அடங்கும்.

    பஸ் படிக்கட்டின் உயரத்தை தரையில் இருந்து 400 மில்லி மீட்டர் உயரத்துக்கும் குறைவாக வைத்திருக்குமாறு டெண்டர் எடுப்பவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

    இதனால் பயணிகள் எளிதாக பஸ்களில் ஏறவோ, இறங்கவோ முடியும். மேலும் சக்கர நாற்காலியை ஏற்றிச்செல்லும் வகையில் சாய்வு தளம் அமைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போக்குவரத்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், 'டெல்லி, மும்பை, புனே ஆகிய நகரங்களுக்கு அடுத்த படியாக சென்னை நகரம் தான் கடைசியாக மின்சார வாகன பயன்பாட்டில் இணைந்துள்ளது. மாநில அரசு இந்த செயல்முறையை விரைவுபடுத்தும் என நம்புகிறோம்' என்றார்.

    இதுதொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    2023-ம் ஆண்டு முதல் சென்னையில் மின்சார பஸ்கள் இயங்க தொடங்கும். முதலில் 100 பஸ்கள் வாங்கப்படுகிறது. இந்த முயற்சி வெற்றி அடையும் பட்சத்தில் சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் இயக்குவதற்கு 2024-ம் ஆண்டுக்குள் மேலும் 400 பஸ்கள் வாங்கப்படும்.

    மின்சார பஸ்களை சார்ஜிங் செய்வதற்கான கட்டமைப்பு மாடல்களை தமிழக அரசு இன்னும் இறுதி செய்யவில்லை. 2 வகைகளில் சார்ஜிங் வசதி இருக்கும்.

    முதல் வகையில் ஒரே இரவில் சார்ஜிங் செய்யப்படும். மற்றொரு வகையில் ஒவ்வொரு பயணத்தின் முடிவிலும் 10 முதல் 30 நிமிடங்கள் சார்ஜிங் செய்யப்படும். இதில் டெண்டர் மதிப்பீட்டுக்கு பிறகு முடிவு எடுக்கப்படும்' என்றார்.

    ×